
காசா பகுதியில் தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.
காசாவில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் நோக்கில், எல்லையில் இஸ்ரேல் தன் ராணுவத்தைக் குவித்து வருகிறது. காஸாவிலிருந்து மக்கள் வெளியேறக் கெடு விதித்திருக்கும் நிலையில், விரைவில் தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் படைகள் ஈடுபடும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, கத்தாரில் அவசர பேச்சுவார்த்தையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் உசேன் அமிர் அப்துல்லாயன் ஈடுபட்டார்.
பின்னர் ஈரான் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில்; காசாவில் தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டால், இந்தப் போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரிவடையும் நிலையைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. போர் பரவுவதைத் தடுக்க விரும்புபவர்கள், காசாவில் அப்பாவி மக்கள்மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தடுக்க வேண்டும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலை ஆதரிக்கும் அமெரிக்காவுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் உசேன் அமிர் கடும் கண்டனம் தெரிவித்தார். வான்வழி தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், தரை வழியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும். என்றும் அவர் எச்சரித்தார்.

