Thoothukudi Rains: விமானங்கள் மதுரையில் தரையிறங்கின!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வருகிறது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில்,  சென்னையில் இருந்து நேற்று காலை 10.15 மணிக்கு 66 பயணிகளுடன் ஒரு தனியார் விமானம் தூத்துக்குடிக்கு புறப்பட்டது.

அந்த விமானம் பகல் 11.55 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால், மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாத காரணத்தால் வானில் வட்டம் அடித்த விமானம், அங்கிருந்து வந்து மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதேபோல் பெங்களுருவில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.05 மணிக்கு தூத்துக்குடியில் தரையிறங்க வேண்டிய தனியார் விமானமும் தரையிறங்க முடியாமல் போனது. அந்த விமானமும் மதுரை வந்து தரையிறக்கப்பட்டது.

மதுரையில் தரையிறங்கிய  2 விமானங்களுக்கும், மதுரை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது. தூத்துக்குடியில் வானிலை சீரானதும் அங்கு அந்த விமானங்கள் செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *