
வங்கக்கடலில் இன்று புதியக் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதியக் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும், புதிதாக உருவாகக்கூடியக் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில், மீனவர்கள் வருகின்ற 28 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது.



