
தேனியில் திமுக நிர்வாகி என்பதால் போலியாக புகார் கொடுத்து கைது செய்யப்பட்ட தனது மகனை விடுவிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிதாசன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரிடம் திமுக நிர்வாகியான சுப்புராஜ் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், சுப்புராஜ் மகன் பவுன்ராஜ், மற்றும் அவர்களுடன் ரஞ்சித், மதுரவீரன், பெருமாள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட நபர்கள் பாலமுருகனின் வீட்டிற்கு சென்று கற்கள் கொண்டு ஏறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனை தடுக்க வந்த பாலமுருகனின் தம்பி வீரராகவனை கடுமையாகத் தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கற்களைக் கொண்டு வீடு மற்றும் கார் ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றுள்ளனர். இதையடுத்து, பாலமுருகன் மீது ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் சுப்புராஜ் பிசிஆர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் திமுக நிர்வாகி என்பதால் பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, பாலமுருகனின் தாய் ஜோதி கொடுத்த புகாரின் அடிப்படையில், பவுன் ராஜ், பெருமாள், மதுரை வீரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் மதுரை வீரன் என்பவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் மற்ற நபர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்திற்கு உயிரிழக்கச் செய்துவிடுவதாக அச்சுறுத்தி வருவதாகக் கூறி பாதிக்கப்பட்ட தரப்பினர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். போலியாக புகார் கொடுத்து கைது செய்யப்பட்ட தனது மகனை விடுவிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தார்.



