
அண்டார்டிக்:
காதல் ஜோடியைப் பென்குயின் பறவை ஒன்று வியக்க வைத்த சம்பவம் சமூக ஊடகத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
மனிதர்களைவிட விலங்குகள் பல நேரங்களில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு முன்பு எல்லாம் அனைவருக்கு கிடைக்கவில்லை. இது இண்டர்நெர் உலகம் என்பதால் விரல் நுனியில் உலகில் எந்த மூலையில் நடக்கும் அற்புதமான ஒரு அதிசயத்தை அதன் அழகு குறையாமல் வீட்டிலிருந்தே மொபைல் திரையில் பார்த்து ரசித்துவிட முடிகிறது.
விமானத்தில் பறக்கும்போது பார்க்க முடியாத ஏரியல் வீவ்யூ காட்சிகளை ட்ரோன் மூலம் கண்டு ரசிக்க முடிகிறது நம்மால். அந்தளவுக்கு கேமிரா கோணம் 360டிகிரியை தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம், யூடியூப் என இந்த உலகம் காணொளிகளால் கரைபுரண்டு ஓடுகிறது.
இப்போது இந்த டிரெண்டிங் உலகில் இடம்பிடித்துள்ளது ஒரு பென்குயின் பறவையின் சேட்டை. காதல் ஜோடி ஒன்றை வியப்பில் மூழ்கடித்த ஒரு பென்குயின் பற்றிய வீடியோ 14,609,183 லைக்குகளை அள்ளிக் குவித்திருக்கிறது. அதாவது 141 மில்லியன் வீவ்யூஸை தாண்டி அத்தனைக் கோடி இதயங்களை ஈர்த்திருக்கிறது அந்தப் பென்குயின் பறவை.
அண்டார்டிக் தீபகற்பத்தில் பனிக்கட்டிகள் கொட்டிக்கிடக்கும் மலைச்சிகரத்தில் ஒரு காதல் ஜோடி பாதையில் அடைத்துக் கொண்டு கட்டிப்பிடித்து தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டிருந்தனர். அந்த வழியே வந்த பென்குயின் அவர்கள் இருவரும் பாதையை அடைத்தபடி நிற்பதை உணர்ந்து மிகச் சாதுவாக அப்படியே நிற்கிறது. மிக நாகரிகமாக அந்த ஜோடியைப் பிரித்துவிட்ட பாவத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்ற எண்ணம் அந்த 5 அறிவு கொண்ட பறவைக்கு இருந்தது.
தங்களின் பின்னால் பறவை நடந்து வருகிறது. நாம் அதன் பாதையின் குறுக்கே நிற்கிறோம் என்பதை ஜோடி அறிந்திருக்கவில்லை. சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கையில் பறவை காத்திருப்பதை அறிந்தனர். உடனடியாகப் பாதையை விட்டு விலகினர். அதை உணர்ந்து கொண்ட பென்குயின் பறவை தொடர்ந்து நடத்து சென்று அவர்களைக் கடந்து போனது.
அந்த அற்புதமானக் காட்சிதான் ஒரு வீடியோவில் பதிவாகி இருந்தது. அதை இன்ஸ்டாகிராமில் ciera.ybarra என்ற பயனாளி பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தப் பெண் பனிச்சறுக்கு விளையாட்டிலும் பனிமலை ஏற்றத்திலும் ஆர்வம் கொண்ட விளையாட்டு வீரர் என அறிய முடிகிறது. அவர் அது தொடர்பாகப் பல வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். அவர் தன்னைப் பற்றிய சுயக்குறிப்பில் ‘உலகம் முழுவதும் சுற்றித் திரியும் தீவிரமான சாகசப் பெண்’என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காணொளிதான் தற்போது 141 மில்லியன் வீவ்யூஸ் சென்றுள்ளது. அதற்கு ஆயிரக் கணக்கான நபர்கள் கருத்திட்டு வருகின்றனர். இந்தச் சாகச பயணம்பற்றிச் சியரா ய்பரா, “கடந்த சில வாரங்கள் எதிர்பார்ப்பு நிறைந்ததாக இருந்தன! நான் படகோனியாவைச் சுற்றி நடைப்பயணம் செய்து அண்டார்டிக்காவை ஆராய்ந்தேன். வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு பயணத்தை மேற்கொண்டேன். அதற்கு மேல், எனது வீடியோக்களில் ஒன்று தற்செயலாக வைரலானது.
மேலும் எனது பயணங்கள் மற்றும் உள்ளடக்கத்திற்குக் கிடைத்த நேர்மறையான கருத்துகளால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த அற்புதமான விலங்குகளுடன் அதிக நேரம் செலவிடுவது பயணத்தின்போது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
எனது வனவிலங்குப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நான் நிச்சயமாகத் தொடர்ந்து வெளியிடுவேன். அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. இந்தக் கிரகத்தின் தொலைதூர பகுதிகளை ஆராய்ந்து, உலகை அழகாக மாற்றும் அனைத்து இயற்கை மற்றும் வனவிலங்குகளையும் நேசிக்கும் வாய்ப்புக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்ன ஒரு வாழ்க்கை இது” என்று தெரிவித்துள்ளார்.


