
சாக்லேட் எடுக்கச் சென்ற சிறுமி பரிதாபமாகப் பலி!
ஹைதராபாத்: தெலங்கானாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் குளிர்சாதன பெட்டியிலிருந்து சாக்லேட் எடுக்க முயன்ற 4 வயது சிறுமி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் நவிபேட்டாவைச் சேர்ந்த சேகர், சம்யுக்தா தம்பதி தங்களது மகள் ரித்திஷாவை அழைத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். விடுமுறை முடிந்து மீண்டும் வீட்டிற்கு கிளம்ப தயாரான அவர்கள், சில பொருட்களை வாங்குவதற்காக அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்றனர்.
அப்போது குளிர்சாதன பெட்டியிலிருந்து சாக்லேட் ஒன்றை எடுக்க முயன்ற சிறுமிமீது மின்சாரம் தாக்கியது. சிறுமியை மீட்டப் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பல்பொருள் அங்காடி நிர்வாகத்தினரின் அலட்சியம் காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாகக் கூறி தர்ணாவில் ஈடுபட்ட உறவினர்கள் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


