
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தில் சங்கீதா என்பவர் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கிடையே பணியின்போது ஏற்பட்ட மோதலால் நேற்று கிராம நிர்வாக அலுவலர் தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்துப் பூட்டி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அப்போது தமிழரசி, உதவியாளர் சங்கீதாவை பார்த்துக் கதவைத் திறந்து விடு. இல்லையென்றால் தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்வேன் என எச்சரிக்கை செய்தும் உன்னால் முடிந்ததை பாரெனக் கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் உதவியாளர் சங்கீதா.
இதனைத் தொடர்ந்து தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து பூட்டி இருந்த கதவைத் திறந்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இது போன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



