
தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா வரும் 9ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக இன்று காலைக் கோயிலில் பந்தக்கால் நடப்பட்டது. ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நாளன்று விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஐப்பசி சதய நட்சத்திரம் 10ம் தேதி வருவதால், 9ம் தேதி பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மீக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெற உள்ளது. 10ம் தேதி காலைத் தேவாரநூலுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதியுலா நடைபெறுகிறது. பின்னர் பெரிய கோயிலுக்கு அருகே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்குக் கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து ராஜராஜ சோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாகப் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்துச் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்துகின்றனர். இதையடுத்து, பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறும். அன்று இரவு ராஜராஜ சோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற உள்ளது.

