மது பிரியர்களின் கூடாரமாக திகழும் வெங்கரை பழுதடைந்த பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியத்துக்குப்பட்டவெங்கரை கிராமத்தில் அமைந்துள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இதன் அருகிலேயே மிகவும் இடிந்து ஆபத்தானநிலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இடிந்த நிலையில் முட்புதர்கள் மண்டி மது பிரியர்களின் கூடாரமாக உள்ளது.
அத்தோடு இந்த முப்புதர்களில் விஷ வண்டுகள் குடியிருக்கும் வரை உள்ளதால் சில நேரங்களில் வண்டுகள் கூட்டமாக இப்பகுதியில் பறந்து திரிகின்றன. இதனால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற வரக்கூடிய நோயாளிகள் விஷ வண்டிகளின் அச்சத்துடனே மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் மருத்துவமனை அருகிலேயே மிகவும் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர்மேல்நிலை தேக்க தொட்டி உள்ளதால் இப்பகுதியில் சிறு குழந்தைகள் விளையாடி வருவதோடு ஆடு மாடுகள் இளைப்பாறியும் வருவதால் எந்த நேரத்திலும் குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே இருந்து வருகிறது. இது தொடர்பாக பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் குடிநீர் தேக்க தொட்டி மற்றும் பழைய மருத்துவமனை கட்டிடம் ஆகியவற்றை இடிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த குடிநீர் தேக்க தொட்டியையும் அதேபோல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பழைய மருத்துவமனை கட்டிடத்தையும் உடனடியாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

