
கம்போடியாவுடனான சண்டை தீவிரம் அடைந்துள்ளதால், தாய்லாந்தில் 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.கம்போடியா,தாய்லாந்து நாடுகள் இடையே புராதன கோயில் விவகாரம் தொடர்பாக சண்டை மூண்டுள்ளது. இருநாடுகள் இடையேயான இந்த மோதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எல்லைப் பகுதியில் இருக்கும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்ற இருநாடுகளும் அறிவுறுத்தி உள்ளன. முன்னதாக, கம்போடியாவுடனான பிரச்னை நுட்பமானது, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும் என்று தாய்லாந்தும், அமைதியாக இந்த பிரச்னையை தீர்க்கவே விரும்புவதாகவும் கம்போடியாவும் அறிவித்து இருந்தது.
அண்மையில் எல்லையில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்த நிலையில் இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பப் பெற்றன.இந்நிலையில் நேற்று எல்லையில் இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.தாய்லாந்து F16 விமானங்களை பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.
ஒரு தாய்லாந்து வீரர் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 14 வீரர்கள் மற்றும் 32 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தாய்லாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கம்போடியா தரப்பில் குறைந்தது 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். எல்லையோர கிராமங்களில் இருந்து 4,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்ற மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


