
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்குச் சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம் ஆகியவற்றுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து நாளை மாவட்டத் தலைநகரங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் தமிழ்நாடு கஞ்சா, கள்ளச்சாராயம், போதைப்பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான, மிகக் கொடூரமான பாலியல் கொடுமைகளும், கொலைகளும் நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்..
தி.மு.க. ஆட்சியில் ஐந்தாண்டுகளில் காவல்துறைக் கொட்டடியில் 30 பேர் உயிரிழந்ததையும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 பட்டியலின இளைஞர்கள் உயிரிழந்ததையும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் நாடு ரவுடிகளினுடைய புகலிடமாக, கூலிப் படைகளின் ராஜ்ஜியம் நடக்கின்ற இடமாக மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுளளார்..
திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.




