
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி தொப்பை கணேசனைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த “தொப்பை கணேசன்” மீது மூன்று கொலை வழக்குகள், ஏழு கொலை முயற்சி வழக்குகள், 14 கொள்ளை வழக்குகள் என முப்பதுக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அண்மையில் புழல் அருகே கண்ணப்பசாமி நகரில் தொழிலதிபரின் வீட்டில் புகுந்து, அங்கிருந்தவர்களைக் கட்டிப் போட்டு 25 இலட்சம் ரூபாய், 15 பவுன் நகைகள் ஆகியவற்றைக் கொள்ளையடித்த வழக்கில் காவல்துறையினர் இவனைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள பாழடைந்த வீட்டில் தொப்பை கணேசன் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்துத் தனிப்படையினர் அங்குச் சென்று அவனைப் பிடிக்க முயன்றனர். அப்போது தொப்பை கணேசன் அரிவாளால் காவலர்களை வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் தற்காப்புக்காகக் காவலர் துப்பாக்கியால் சுட்டதில், அவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான். அவன் உடலைச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கூறாய்வுக்காகக் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காவல் இணை ஆணையர் உமா, கூடுதல் ஆணையர் சீனிவாசன், உதவி ஆணையர் குமார் ஆகியோர் நிகழிடத்துக்குச் சென்று ஆய்வு மேற் கொண்டனர்



