
நெற்கதிரை கையில் ஏந்தி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் விவசாயிகள் காய்ந்த நெற்கதிரை கையில் ஏந்தி, ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.
காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரரை கண்டித்து இன்று நாகை மாவட்டம் கீழ்வேளூரில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்பு பட்டை அணிந்து காய்ந்த நெற்கதிருடன் கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை அங்குக் குவிக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து காரைக்காலிலிருந்து தஞ்சை சென்ற பயணிகள் ரயிலைக் கீழ்வேளூரில் விவசாயிகள் தண்டவாளத்தில் ஓடித் தடுத்து நிறுத்தினர். சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை அங்கேயே நிறுத்தினார். அப்போது காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளும், வாக்குவாதமும் ஏற்பட்டது.
பின்னர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கர்நாடகா அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் காவல் துறையினர் குண்டுகட்டாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக ஒரு சில ரயில்வே காவல் துறையினர் தண்டவாளத்தின் அருகே கீழே விழுந்ததுடன், விவசாயிகளின் கால் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது.
இதனால் அங்குப் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
அப்போது காவிரி தனபாலனை காவல் துறையினர் தாக்கியதாகக் கூறி திடீரென விவசாயிகள் கீழ்வேளூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேவூர் கீழ்வேளூரில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் பின்னர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர்.


