
கர்நாடகாவின் கார்வார் மாவட்டத்தில் உள்ள தண்டேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 9 மற்றும் 10 ம் வகுப்புகளைச் சேர்ந்த 14 மாணவிகள் கடந்த சனிக்கிழமையன்று தங்கள் இடது கைகளை வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட இது கூட்டு தற்கொலைக்கான முயற்ச்சியே என்று கூறப்படுகிறது…
எதற்காகச் சிறுமிகள் இத்தகைய கொடூர செயல்களைச் செய்தார்கள் என்பது குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், மன உளைச்சலில் இருக்கும் சிறுமிகளுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தனியார் கன்னட பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்கள் சனிக்கிழமை மதியம் பள்ளி நேரம் முடிந்ததும் வெட்டிக் கொண்டதாகத் தெரிகிறது.
பள்ளி பொதுவாகச் சனிக்கிழமைகளில் மதியம் முடிவடையும். பள்ளி நேரம் முடிந்ததும் அந்த மாணவிகள் தங்கள் இடது கையில் காயத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பள்ளி நிர்வாகத்திடம் என்ன நடந்தது என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் குடும்பத்தினர் தொடர்ச்சியாகப் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதால், பயம் மற்றும் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் பள்ளி கல்வித்துறை க்கு தகவல் கொடுத்துள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், சிறுமிகளின் கைகளில் சில சென்டிமீட்டர் ஆழத்திற்கு வெட்டுகள் இருந்ததாகவும், ஒரு சில சிறுமிகளின் கைகளில் 14 முதல் 15 வெட்டுகள் இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்த வெட்டுகள் அனைத்தும், ஷேவிங்கிற்கு பயன்படுத்தப்படும் ரேசர் பிளேடுகளை கொண்டு வெட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் தற்போது தண்டேலியில் உள்ள அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, இந்த வழக்கைத் தண்டேலிகாவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

