
பாஜகவிலிருந்து விலகி, புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, தனது முதல் மாநாட்டை ஜூலை 12-ம் தேதி பொள்ளாச்சியில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த அண்ணாமலை, அதனைத் தொடர்ந்து சமூக வலைதள நேரலையில் ‘We The Leaders’ (wetheleader.org) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்குவதாகத் தெரிவித்தார். இந்த இயக்கத்தைப் பிற்காலத்தில் முழுமையான அரசியல் கட்சியாக மாற்றவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த இயக்கத்தில் இணைய விரும்புபவர்கள் இணையதளம் மூலம் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்ட வெறும் 24 மணி நேரத்திற்குள்ளேயே, சுமார் 13 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தனது புதிய அரசியல் பயணத்தின் முதல் மைல்கல்லாக இந்த மாநாட்டை அவர் முன்னெடுத்துள்ளார்.



