
பத்து இலட்சம் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் சர்க்கரை இருப்பு குறைந்துள்ள நிலையில் மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து விலை உயர்ந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட விழாக்காலங்களில் சர்க்கரையின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மராத்திய மாநிலத்தில் ஒரு குவிண்டால் சர்க்கரையின் விலை 5400 ரூபாய் முதல் 5560 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்நிலையில் உள்நாட்டில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் சுங்க வரியில்லாமல் பத்து இலட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கடைசியாக 2016 – 2017ஆம் ஆண்டில் சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டது. பத்தாண்டுகள் கழித்து மீண்டும் சர்க்கரை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத இறுதி வரை 10 இலட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இறக்குமதி செய்தாலும் உள்நாட்டில் சர்க்கரையின் விலை குறைய வாய்ப்பில்லை என்றே வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.



