
பட்டாசு ஆலைகள் விதிகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை!
விருதுநகர்: பட்டாசு ஆலைகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் சிவகாசி பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் அந்தப் பட்டாசு கடை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் பட்டாசு கடைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் விருதுநகர் மாவட்டத்தில் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனுமதி இல்லாமல் செயல்படும் பட்டாசு கடைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, பட்டாசு ஆலைகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனைக் கடைகள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதால் விரைவில் மேம்பாலப் பணிகள் தொடங்கும் எனவும் விளக்கமளித்தார்.


