
இலங்கை அணி போராடி வெற்றி!
லக்னோ: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் லக்னோவில் இன்று நடந்த 19-வது லீக்கில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, குசல் மென்டிஸ் தலைமையிலான இலங்கை அணியுடன் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் நெதர்லாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. விக்ரம்ஜித் சிங் (4), மேக்ஸ் ஓடவுட் (16), அக்கர்மேன்(29), டி லீட்(6), நிதமானுரு (9), கேப்டன் எட்வர்ட்ஸ் (16), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் நெதர்லாந்து அணி 91 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனைத் தொடர்ந்து சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் வான் பீக் ஆகியோர் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இதனால், நெதர்லாந்து அணி நல்ல ஸ்கோரை எட்டியது.
ஏங்கல்பிரெக்ட் 70 ரன்களும், வான் பீக் 59 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நெதர்லாந்து அணி 49.4 ஓவர்களில் 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது.நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி கடைசியாக 48.2 ஒவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.


