Srivilliputhur: ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 30-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரமான இன்று காலை 9.05 மணிக்குத் தேரோட்டம் தொடங்கியது. இதில் மாவட்ட கலெக்டர், காவல்துறை அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 7 வடங்களையும் பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாகத் தேரை இழுத்து வருகின்றனர்.

தேருக்கு பின்னால் இரு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவினை முன்னிட்டு நேற்று இரவு பூப்பல்லக்கில் ஆண்டாள் வீதி உலா வந்தார். தேரோட்டத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்தனர். இந்நிலையில் ஆண்டாளுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பெருமாள் கோவிலிலிருந்து மங்களப்பொருட்கள் கொண்டு வரப்பட்டன. மதுரை கள்ளழகர் கோவிலிலிருந்து பட்டு வஸ்திரம், பழங்கள், மாலைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட கோவில் பிரசாதங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் மேள தாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *