
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னையின் வருகை தினமான இன்று ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் ஆன்மிக சிந்தனையாளர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு அன்னையை தரிசனம் செய்தனர்.
அரவிந்தரை ஆன்மிக குருவாக ஏற்று கொண்டு அன்னை 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிலிருந்து புதுச்சேரி மரையன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் வந்து தங்கி அரவிந்தருடன் ஆன்மீக பணியில் ஈடுபட்டு வந்தார். அதன் விளைவாகத்தான் அரவிந்தரின் மறைவிற்கு பிறகு ஆரோவில் சர்வதேச நகரத்தை உருவாக்கினார்.
அன்னை புதுச்சேரிக்கு வந்த நாளை ஆண்டுதோறும் இந்நாள் அரவிந்தர் ஆசிரமம் சார்பில் அன்னை வருகை தினமாகக் கொண்டப்பட்டு வருகிறது. அன்னையின் ஆண்டு வருகை தினமான இன்று அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை தங்கி இருந்த அறை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. அன்னையின் அறையை ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் ஆன்மிக சிந்தனையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பார்வையிட்டு, அன்னையின் சமாதி முன்பு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். மேலும் அன்னை வருகை தினத்தையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் சிறப்பு கூட்டு தியானமும் பிரார்த்தனையும் நடைபெற்றது.

