
பொது இடத்தில் அந்தச் சால்வையை வாங்கி கீழ போட்டது நான் செய்த தப்பு. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என வீடியோவில் சிவக்குமார் பேசி இருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் செல்பி எடுக்க வந்த ஒருவரின் செல்போனை பிடுங்கி எறிந்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த சிவக்குமார், அங்குத் தனக்கு சால்வை அணிவிக்க வந்த முதியவர் ஒருவரிடமிருந்து அந்தச் சால்வையை பிடுங்கி தூக்கி எறிந்துள்ளார்.
காரைக்குடியில் பழ.கருப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள சென்றபோது தான் இந்தச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சிவகுமாரின் இந்தச் செயலுக்குச் சமூக வலைதளங்களில் கண்டனக்குரல்களும் எழுந்து வந்தன. இந்த விஷயம் பூதாகரமானதால் தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டதோடு, தான் அவ்வாறு செய்தது ஏன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சிவக்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், எனக்குச் சால்வை போர்த்திக் கொள்ளும் பழக்கம் கிடையாது. எனக்கு யாரேனும் சால்வை போர்த்த வந்தால் அதை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுவேன். அன்றைக்கு அந்நிகழ்ச்சி முடிய லேட் ஆனதால் நானும் மிகவும் சோர்வடைந்துவிட்டேன். அப்போது மேடையில் பேசிவிட்டு கிழே வரும்போது தான் என் நண்பன் கரீம் எனக்குச் சால்வை கொடுக்க வந்தார்.
எனக்குச் சால்வை போடுவது பிடிக்காது என்று தெரிந்தே அவர் கையில் சால்வையுடன் வந்திருந்தார். எனக்குச் சால்வை பிடிக்காது எனத் தெரிந்துகொண்டே சால்வையை எடுத்து வந்தது அவர் செய்த தவறு என்றால், பொது இடத்தில் அந்தச் சால்வையை வாங்கி கீழ போட்டது நான் செய்த தப்பு. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அந்த வீடியோவில் சிவக்குமார் பேசி இருக்கிறார்.

