
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் வெற்றிக்கு எதிராகத் தொடுத்த வழக்கைத் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் திரும்பப் பெற்றுள்ளார்.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி அதே தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வர வேண்டிய அஞ்சல் வாக்குகள் மாறாக வேலூர் மாவட்டம் அருகில் உள்ள திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குச் சென்றுவிட்டதாகக் கூறிப் பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை நீதிமன்றத்தில் வழங்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. தமிழகச் சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்குத் தடை விதித்தது. இதன் மேல்முறையீட்டில் உயர் நீதிமன்தின் உத்தரவுக்கும் வழக்கு விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கிடையில் அந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், பெரியகருப்பன் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்று, அவர் வழக்கைத் திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. இதனால் தொகுதி மாறி அனுப்பப்பட்ட அஞ்சல் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரித் தாக்கல் செய்திருந்த வழக்கைத் திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் திரும்பப் பெற்றுள்ளார்.




