
தூத்துக்குடியில் காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததைக் கண்டித்துக் குடும்பத்தினரும், உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாசலம் என்ற இளைஞர் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றதாகக் கூறி ஜூலை 18ஆம் நாள் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். அப்போது, காவல்துறையினர் அவரைத் தாக்கியதில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அருணாசலம் இன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். காவல்துறையினர் அடித்ததாலேயே தங்கள் மகன் இறந்ததாகக் கூறி இளைஞரின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் அட்டூழியத்தைக் கண்டித்து அருணாசலத்தின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தென்பாகம் காவல்துறையினர் தன்னைத் தலையில் தாக்கியதாக அருணாசலம் வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி காவல்துறையினரின் கொடூரத் தாக்குதல் அம்பலமாகியுள்ளது.



