Sivaganga: கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா.. மழை வேண்டி வினோத வழிபாடு!

Advertisements

சிவகங்கை மாவட்டத்தில் மழை வேண்டி நடத்தப்பட்ட மீன் பிடி திருவிழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள் போட்டிபோட்டு குளத்தில் இறங்கி மீன்களை அள்ளிச் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே துவார் கிராமத்தில் உள்ள வள்ளிக் கண்மாயில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் மீன்பிடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. துவார் கிராமத்தில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெறும் என அறிவிப்பு செய்ததை அடுத்து துவார், பூலாங்குறிச்சி, நெற்குப்பை, செவ்வூர் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குளக்கரையில் குவிந்தனர்.

ஆலய வழிபாட்டிற்கு பின் ஊர் பெரியவர்கள் மீன் பிடி திருவிழாவை வெள்ளை விடுதல் எனப்படும் வெள்ளைக்கொடி அசைத்துத் துவக்கி வைத்தனர். அப்போது மின்னல் வேகத்தில் குளக்கரையில் கையில் மீன்பிடி உபகரணங்களுடன் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன்களைப் பிடிக்கத் தொடங்கினர்.

பாரம்பரிய முறையில், வலை, பரி, கச்சா, தூரி ஆகிய மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு மீன்களைப் பிடித்த பொதுமக்கள், நாட்டு வகை மீன்களான சிசி, போட்லா, கட்லா, விரால், சிலேபி, அயிரை, கெண்டை உள்ளிட்ட வகை வகையான மீன்களைச் சாக்கு பை, கூடை மற்றும் பாத்திரங்களில் அள்ளிச் சென்றனர். வருடந்தோறும் இக்கிராமத்தில் உள்ள இந்தப் பாசனகண்மாயில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும் சூழலில் இந்த மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டும் வழக்கம்போல் இக்கண்மாயில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடத்திய இந்த மீன்படி திருவிழாவில், சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் மீன்களைப் பிடித்து மகிழ்ச்சியோடு சென்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *