singapore:முன்னாள் அமைச்சருக்கு 12 மாதம் சிறை தண்டனை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1962ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஈஸ்வரன். சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறிய இவர், 1997ம் ஆண்டு அந்த நாட்டு எம்.பி., யாகத் தேர்வு செய்யப்பட்டார். 2006ல் லீ ஹெய்ன் லூங்கின் அமைச்சரவையில் இடம்பெற்றார். வர்த்தக உறவுகளுக்கான அமைச்சராகவும், போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த இவர், தொழிலதிபர்களிடமிருந்து, 4,00,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசுப் பொருட்களைப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஈஸ்வரன், அதன் பிறகு, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று நிரூபிப்பேன் எனக் கூறி வந்தார்.

கடைசியில், தன் மீதான 35 குற்றச்சாட்டுகளில் 5ல் குற்றத்தை ஒப்புக் கொண்டார். கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் விலக்கப்பட்ட நிலையில், பரிசு பொருட்களைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மட்டும் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்தது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 50 ஆண்டு காலத்தில் சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக இத்தகைய வழக்குப் பதிவு செய்யப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *