Haryana Assembly elections:காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு…வீரேந்திர சேவாக் முடிவு..பாஜக அதிர்ச்சி!

புதுடில்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரன்பீர் சிங் மகேந்திரா மகன் அனிருத் சவுத்ரிக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வீடியோ வெளியிட்டார்.

ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 5ல் தேர்தல் நடக்கிறது. பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட முக்கிய கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் பா.ஜ., செயல்பட்டு வருகிறது.

பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் ரன்பீர் மகேந்திராவின் மகனும், நான்கு முறை ஹரியானா முதல்வராக இருந்த பன்சி லாலின் பேரனுமான அனிருத் சவுத்ரி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், ஹரியானா சட்டசபை தேர்தலில், தோஷம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அனிருத் சவுத்ரிக்கு ஆதரவாக மக்கள் ஓட்டளிக்குமாறு, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வீடியோ வெளியிட்டார்.

நான் அனிருத் சவுத்ரியை எனது மூத்த சகோதரராகக் கருதுகிறேன். அவரது தந்தை ரன்பீர் சிங் மகேந்திரா, பிசிசிஐ தலைவராகவும் பணியாற்றியவர், எனக்கு நிறைய ஆதரவளித்தார். இது அவருக்கு மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகும். மேலும் என்னால் உதவ முடியும் என்று நினைக்கிறேன். மக்கள் ஓட்டளித்து அனிருத் சவுத்ரி வெற்றி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

‘தற்போதைய பா.ஜ., அரசு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்க்கத் தவறியதால், காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதில் உறுதியாக உள்ளேன் எனச் சேவாக்கின் பக்கத்தில் அமர்ந்திருந்த அனிருத் சவுத்ரி கூறினார். இதே தொகுதியில் பன்சிலாலின் மற்றொரு மகன் வழி பேத்தியான ஸ்ருதி சவுத்ரி பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *