
பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் அச்சம் இல்லாமல் புகாரளிக்க “அச்சம் தவிர்” என்ற தனித்துவமான QR Code மூலம் புகார் படிவம் உருவாக்கப்பட்டு உள்ளது.
சமீபகாலமாக 10 மாத குழந்தை முதல் 90 வயது முதியவர்வரை கடத்தல், பாலியல் வல்லுறவு, வீட்டு வன்முறை, வரதட்சணை மரணங்கள், பாலியல் தாக்குதல்கள் எனப் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து அச்சம் இல்லாமல் புகாரளிக்க QR Code மூலம் புகார் படிவம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதற்காக “அச்சம் தவிர்” என்ற தனித்துவமானQR Code மூலம் புகார் படிவம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது பெண்கள் தயக்கம் இல்லாமல் மற்றும் எவ்வித அச்சம் இல்லாமல் புகாரளிக்க மிகவும் உதவியாக இருக்கும்.புகார் அளிக்கும் பெண்கள் தங்களது சுய விவரங்கள் எதுவும் குறிப்பிடாமல் புகாரளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்காகத் தென்காசி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாகப் புகார் அளிக்க உள்ளக புகார் குழு அமைக்கப்பட உள்ளது.
இப்புகார்குழு அமைக்கபடாத பட்சத்தில் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 நபர்களுக்கு அதிகமாகப் பணிபுரியும் இடங்களில் உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டு,
அதன் விவரத்தினை poshtenkasidistrict@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகம் 140/5B சக்தி நகர், தென்காசி 627811 என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


