
சாலை, கழிவு நீர் வாய்க்கால் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி செம்பியநல்லூர் ஊராட்சி அலுவலகத்தை அப்பகுதிபொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டு பகுதியில் உள்ள நேரு நகர் குடியிருப்பு பகுதியில், பல ஆண்டுகளாக சுமார் 40 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.மேலும் இந்த குடியிருப்பு பகுதியில் சாலை வசதி, கழிவு நீர் வடிகால், குடிநீர் உள்ளிட அத்தியாவசிய தேவைகளை செய்து தர வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறக்க விடாமல் அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது,நேரு நகர் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி தலைவர் மற்றும் கடந்த மூன்று கிராமசபை கூட்டத்திலும் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை.
நமக்கு நாமே திட்டத்தில் வீடு தோறும் பங்குத்தொகை வசூல் செய்து அதன் மூலமாகவும் சாக்கடை குடிநீர் மற்றும் சாலை வசதியை செய்து தர கேட்டும்.எந்த பயனும் இல்லை என்று கூறினார்.
மேலும் இதனால், சாக்கடை நீர் ரோடு முழுவதும் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அப்பகுதியல் வசிக்கும் பலருக்கும் தொடர் காய்ச்சல், சளி, வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.தெருவில் குடிநீர் குழாய் உள்ள இடங்களிலும் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. எனவே விரைந்து அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்கின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர்அலுவலக வாசலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.
தகவலறிந்து ஊராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்த பி.டி.ஒ விஜயகுமார் (கிராமம்) ஊராட்சி தலைவர் சுதா, (சுயேட்சை), மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் முன்னிலையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.இதில் இரண்டு மாத கால அவகாசத்திற்குள் பொதுமக்களின் நமக்கு நாமே திட்டம் மூலம் வரும் பங்களிப்பு தொகையுடன், ஊராட்சி ஒன்றியம் சார்பில் இந்த பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


