
நான் ரொம்ப சீரியஸ் ஆனவன்” சீமான் ஆவேசம்
சென்னை: ”என்மீது புகார் தெரிவிக்கும் வீரலட்சுமி யார்? நான் யார் தெரியுமா, கேடுகெட்ட ரவுடிப் பையன், ரொம்ப சீரியஸ் ஆனவன்” நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சென்னை அயனாவரத்தில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: 2011ல் புகாரளிக்கப்பட்ட வழக்கில் இப்போது தான் சம்மன் அனுப்புகின்றனர். என் மனைவியையும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கும் வீரலட்சுமி யார்? நான் யாரென நினைத்து அவர் பேசி வருகிறாரெனத் தெரியவில்லை. நான் ஜனநாயகவாதியாக இருப்பதுதான் இப்போது பிரச்னை.நான் யார் தெரியுமா? கேடுகெட்ட ரவுடிப் பையன். ஜெயிலுக்கு சென்றால் என் பிள்ளை வேதனைப்படும் என்பதால் பொறுமையாகப் போகிறேன். சிரிக்க சிரிக்க பேசுவதாக நினைக்க வேண்டாம், நான் ரொம்ப சீரியஸானவன்.
என்னை ஜெயிலில் வைத்துவிட்டால் வீரலட்சுமிக்கு நீதி கிடைத்துவிடுமா? ஸ்ரீமதிக்கு, பொள்ளாச்சி சம்பவத்தில் எனப் பல சம்பவங்களில் நீதி பெறாமல் எங்கே சென்றார்கள்? நான் ஒரு லட்சம் துப்பாக்கிகளைக் கடந்து சென்று என் தலைவன் பிரபாகரனை சந்தித்து வந்தவன்; எதற்கும் பயப்பட மாட்டேன். நான் ஜெயிலுக்கு சென்று வெளியே வந்து சும்மா விட்டுவிடுவேனா?என் ரத்தத்திலேயே வீரம் இருக்கிறது, என்னிடம் பணம் தான் இல்லை; எனக்குத் தேவை தனலட்சுமி, தானியலட்சுமி மட்டும் தான். எனக்கெனக் குடும்பம் இருக்கிறது, கூட்டம் இருக்கிறது. அதிகபட்சம் இரண்டு வருடம் ஆடுவார்கள். அனைத்தையும் பார்க்கதானே போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



