
வாணியம்பாடியில் பொதுவுடைமைப் பிதாமகன் ஜீவானந்தம் சிலையைக் குப்பையில் வீசியுள்ள செயலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வாணியம்பாடியில் பொதுவுடைப் பிதாமகன் ஜீவானந்தம் சிலையை அலட்சியமாகக் குப்பையில் வீசியுள்ளதைத் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் நாட்டுக்கு உழைத்த மாபெரும் தலைவருக்குத் தவெக அரசு காட்டும் நன்றியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜீவானந்தம் நாட்டு விடுதலைக்குப் போராடிச் சிறையில் வதைப்பட்ட வீரர் என்றும், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
அவருடைய சிலையைக் குப்பையில் வீசியவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, புதிய சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



