தென் துருவ பனிப்பாறையை கப்பலில் கட்டி இழுத்து வர திட்டமிட்ட சவுதி!

Advertisements

சவுதி:

உலகின் பல்வேறு நாடுகளிலும் இப்போது தண்ணீர் பஞ்சம் தான் மிகப் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இதைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அப்படி தான் முன்பு ஒரு முறை சவுதி அண்டார்டிகா பனிப்பாறையை அப்படியே இழுத்து வரத் திட்டமிட்டு இருந்தது உங்களுக்குத் தெரியுமா! இதுகுறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இப்போது பருவநிலை மாற்றம் காரணமாக மழை வந்தால் வெள்ளம்… இல்லையென்றால் வறட்சி என்று எக்ஸ்ட்ரீம் வானிலை நிலவுகிறது. இதன் காரணமாகப் பல நாடுகள் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்கிறது.

இந்தத் தட்டுப்பாட்டைப் போக்கப் பல வழிகளில் உலக நாடுகள் முயன்று வருகின்றன. அப்படி தான் சவுதி இளவரசர் முகமது அல்-ஃபைசல் தனது நாட்டின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க வினோதமான ஒரு திட்டத்தை முன்வைத்து இருந்தார்.

பனிப்பாறையை இழுத்து வரத் திட்டம்:

அதாவது 1970களில் சவுதியில் குடிநீர் கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவியது. இதற்குத் தீர்வாகச் சவுதி இளவரசர் முகமது அல்-ஃபைசல் இந்தத் திட்டத்தை முன்வைத்தார். அதாவது அண்டார்டிகாவிலிருந்து ஒரு மிகப் பெரிய பனிப்பாறையைச் சிறு படகு மற்றும் கப்பல்கள்மூலம் இழுத்து வருவதே அவரது திட்டமாகும். அண்டார்டிகாவிலிருந்து சுமார் 100 டன் எடை கொண்ட ஒரு பனிப்பாறையை இதுபோல இழுத்து வர வேண்டும் என்பதே அவரது திட்டமாகும்.

பிளாஸ்டிக் மற்றும் பாய்மரத்துணி மூலம் அதைப் போர்த்தினால் பனிப்பாறை உருகுவது மெதுவாகும். மேலும், அதை இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி அரேபிய தீபகற்பத்திற்கு மிக அருகே கொண்டு வரவும் அவர் திட்டமிட்டிருந்தார். அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறையை எடுத்து வர எட்டு மாதங்கள் ஆகும் என்றும். இதற்கு அப்போதே 100 மில்லியன் டாலர் வரை செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டது.

சவுதி இளவரசர்:

சவுதி அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினரும், தொழிலதிபருமான இளவரசர் அல்-ஃபைசல் தனது நாட்டின் தண்ணீர் தேவைக்குப் பனிப்பாறை தீர்வாக இருக்கும் என்று நம்பினார். சிறு படகுகளை வைத்தே அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறையை இழுத்து வர முடியும் என அவர் கருதினார். இதற்காக 1977ம் ஆண்டு அயோவா பல்கலைக்கழகத்தில் பனிப்பாறை மாநாட்டையும் நடத்தினார். அதில் பனிப்பாறையை இழுத்து வருவது குறித்து விவாதிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் அங்குத் திரண்டிருந்தனர்.

அந்த மாநாட்டில் அலாஸ்காவிலிருந்து எடுத்து வரப்பட்ட சிறு பனிக்கட்டியை அவர் காட்சிப்படுத்தினார். ஹெலிகாப்டர், விமானம் மற்றும் டிரக் மூலம் அந்தப் பனிப்பாறை கரையாமல் எடுத்து வரப்பட்டது. தனது ஐடியா சாத்தியம் தான் என்பதை நிரூபிக்கவே அவர் இதைச் செய்தார்.

இரு சர்வதேச மாநாடுகள்:

அண்டார்டிக்கா பனிப்பாறையை எடுத்து வருவது தொடர்பாக ஆலோசிக்க இரண்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. அதில் கடலியல், பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு இதில் உள்ள சவால்கள்குறித்து விவாதித்தனர். அவ்வளவு பெரிய பனிப்பாறையை எப்படி இழுத்து வர முடியும், வரும் வழியிலேயே பனிப்பாறை உருகும் சாத்தியம் எவ்வளவு என்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

இது மிகப் பெரிய சிந்தனையாக இருந்தாலும், அது ஒரு போதும் நடைமுறைக்கு வரவில்லை… அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் பெரியளவில் வளராததாலும் அதீத செலவு காரணமாகவும் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், இது ஒரு அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஐடியாவாகவே பார்க்கப்பட்டது.

இந்த முறை ஐக்கிய அமீரகம்:

ஆண்டுகள் பல உருண்டு ஓடின. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2017ம் ஆண்டு மற்றொரு மத்திய கிழக்கு நாடு இதுபோல அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறையை இழுத்து வரத் திட்டமிட்டது. இந்த முறை அது ஐக்கிய அமீரகம்… அங்குத் தண்ணீர் பஞ்சம் அதிகரித்த நிலையில், தொழிலதிபர் அப்துல்லா அல்ஷேஹி என்பவர் இந்தத் திட்டத்தை முன்மொழிந்தார். இதற்கு எமிரேட்ஸ் ஐஸ்பர்க் திட்டம் (Emirates Iceberg Project) என்ற பெயரிடப்பட்டு, விளக்க வீடியோ எல்லாம் வெளியானது. இருப்பினும், சில காரணங்களால் இந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

தண்ணீர் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில், அதைச் சமாளிக்க உலக நாடுகள் எப்படி எல்லாம் முயல்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். பொதுமக்கள் மழை நீரை சேமித்து, இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தினால் இது போன்ற திட்டங்கள் இல்லாமலேயே தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *