
சாம்சங் நிறுவன தொழிலார்களின் போராட்டம்குறித்து விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “சாம்சங் நிறுவனத்திற்கும் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களின் CITU தொழிற்சங்கத்திற்கும் இடையே கடந்த 30 நாட்களாக நீடித்து வரும் பிரச்சனைகள்குறித்து அரசு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு எட்ட முடியாதது வேதனை அளிக்கிறது.
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்காக அரசு காட்டும் முக்கியத்துவம் அங்குப் பணிபுரியும் நம் தொழிலாளர்கள் விசயத்திலும் அரசு காட்ட வேண்டும்.தொழிலாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே சுமுகமான தீர்வை எட்ட அரசு வழிவகை செய்ய வேண்டும்.
அதை விட்டுவிட்டு, காவல்துறையை வைத்துத் தொழிலாளர்களை அச்சுறுத்துவது என்பதோ அவர்களைக் கைது செய்வது என்பதோ இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகாது.
இரண்டு தரப்புகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளர்கள் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தீர்வை எட்டாவிட்டால் இது நாளைப் பிற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அரசு விரைந்து தீர்வை எட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

