
மயோசிடிஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள நடிகை சமந்தா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். நடிகையாக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள சமந்தா, தனது சொந்தத் தயாரிப்பில் நடித்துள்ள ‘எங்கள் தங்கம்’ (தெலுங்கில் ‘மா இன்டி பங்காரம்’) திரைப்படம் நாளை (ஜூன் 19) வெளியாகிறது.
திரைப்படத்தின் விளம்பரத்திற்காகச் சென்னை வந்த சமந்தா, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பு திரைத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா, படத்தின் உருவாக்க அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரை நடனக் காட்சிகளை விட, சண்டைக் காட்சிகளில் நடிப்பதுதான் மிகவும் எளிது. இந்தப் படத்தில் மிகைப்படுத்தப்பட்ட அல்லது வானத்தில் பறப்பது போன்ற சண்டைக் காட்சிகள் இல்லை. மிக இயல்பான, யதார்த்தமான சண்டைக் காட்சிகளையே உருவாக்கியுள்ளோம். இந்தத் திரைப் படத்திற்காகப் படப்பிடிப்பு தளத்தில் எனக்குப் பல காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், காட்சிகள் தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளேன்” என்று தெரிவித்தார்.


