
மத்தியப் பிரதேசத்தில் கோல்டிரிப் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், அந்த மருந்தைத் தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்யக் காவல்துறையினர் விரைந்துள்ளதாகவும் துணை முதலமைச்சர் ராஜேந்திர சுக்லா தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரித்த கோல்டிரிப் மருந்து நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.
இதையடுத்துப் பல மாநிலங்களிலும் கோல்டிரிப் மருந்தின் விற்பனை தடை செய்யப்பட்டது. சுங்குவார் சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மருந்துத் தயாரிப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் மாநிலத் துணை முதலமைச்சர் ராஜேந்திர சுக்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கோல்டிரிப் மருந்தை உட்கொண்டோரில் 20 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
இந்த மருந்தைத் தயாரித்த சென்னையைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்வதற்காக மாநிலக் காவல்துறையினர் அங்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.


