Safe deposit box: 18 லட்சம் பணத்தை தின்ற கரையான்! வங்கி கைவிரிப்பு!

Advertisements

உத்தரப் பிரதேசத்தில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட ரூ.18 லட்சம் பணத்தை கரையான்கள் தின்று நாசம் செய்திருப்பது வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உ.பி.யின் மொராதாபாத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக வங்கியில் வைத்திருந்த ரூ.18 லட்சம் பணத்தை கரையான்கள் தின்றுவிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொராதாபாத்தில் சிவில் லைன்ஸ் காவல் நிலையப் பகுதியில் உள்ள பாங்க் ஆஃப் பரோடாவின் ஆஷியானா கிளையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்ட பணம் கரையான்களுக்கு இரையாகி இருக்கின்றன.

2022 அக்டோபரில் அல்கா பதக் இந்தத் தொகையை டெபாசிட் செய்துள்ளார். சமீபத்தில் அல்கா அந்தப் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றபோது, அவரது கரன்சி நோட்டுகள் கரையான்களால் கடுமையாகச் சேதமடைந்திருப்பதை வங்கி ஊழியர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும் உடனடியாக வங்கி மேலாளரிடம் தெரிவித்தார். இதுகுறித்து பாங்க் ஆப் பரோடாவின் முதன்மை மாவட்ட மேலாளர் விஷால் தீட்சித் கூறுகையில், “வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கரையான்கள் தின்றுவிட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய வங்கி விசாரணை நடத்தி வருகிறது” என்றார்.

லாக்கர் பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் பணத்தை சேமித்து வைப்பதை தடை செய்கிறது. “லாக்கரில் வைக்கப்படும் அழிந்துபோகக்கூடிய பொருட்களின் சேதத்திற்கு வங்கி பொறுப்பேற்க முடியாது” என்று லாக்கர் பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றிக் கூறும் அல்கா, “நான் லாக்கரில் கரன்சி நோட்டுகளை வைக்கும்போது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். ஆனால் போதுமான பூச்சி கட்டுப்பாடு நடவடிக்கைகளை வங்கி உறுதி செய்யவில்லை. அதிகாரிகள் முழுமையான விசாரணைக்கு உறுதி அளித்துள்ளனர்” என்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *