அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷிய பாடகர் மரணம்!

ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் தங்களின் அண்டை நாடான உக்ரைன் சேருவதை எதிர்த்து ரஷியா அந்நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது.

3 ஆண்டுகளாகப் போர் நடந்து வரும் நிலையில் இரண்டு பக்கங்களிலும் உயிர்சேதங்களும், மக்கள் இடப்பெயர்வும் நிகழ்ந்துள்ளன.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும், ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன் மீது தொடுத்த போரைக் கண்டிக்கும் விதமாக அதிபர் புதினை விமர்சித்த ரஷிய பாடகர் தனது வீட்டின் ஜன்னல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

ரஷிய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த புதன்கிழமை போலீஸ் சோதனையின்போது ஜன்னலிலிருந்து கீழே விழுந்த அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் ராணுவத்திற்கு நன்கொடை அளித்ததாகவும், அதிபர் விளாடிமிர் புதினை “முட்டாள்” என்று அழைத்ததாகவும் அதிகாரிகள் அவரை விசாரித்து வந்தனர்.

மேலும் உக்ரைன் ராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அறிக்கையின்படி, அவரது வீட்டில் போலீஸ் சோதனையின்போது தண்ணீருக்காகச் சமையலறைக்குச் சென்றதாகவும், பின்னர் ஜன்னலைத் திறந்து கீழே குதித்ததாகவும் கூறப்படுகிறது.

புதின் மற்றும் உக்ரைன் போரை ஸ்ட்ரோய்கின் சமூக ஊடகங்களில் பலமுறை விமர்சித்துள்ளார்.

கடந்த 2022 இல் தனது சமூக வலைதள பதிவில், இந்த முட்டாள் [புதின்] தனது சொந்த மக்கள்மீதும் சகோதர தேசத்தின் மீதும் போரை அறிவித்தார்” என்று பதிவிட்டிருந்தார்.

அதிபர் புதினை விமர்சிப்பவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது இது முதல் முறை அல்ல.

உக்ரைன் போரை வெளிப்படையாக விமர்சித்த ரஷிய பாலே நடனக் கலைஞர் விளாடிமிர் ஷ்க்லியாரோவ், கடந்த நவம்பரில் ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து மர்மமான முறையில் குதித்து இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *