
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு தொடர்பு உள்ளதாகத் தகவல் வருகிறது. விஷச் சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும் பாஜகவும் அரசியல் செய்கின்றனர் எனத் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாராய விற்பனையைத் தடுக்க தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்தார்.
அப்போது, “கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் நடந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு தொடர்பு உள்ளதாகத் தகவல் வருகிறது. விஷச் சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும் பாஜகவும் அரசியல் செய்கின்றனர்.
இந்த விவகாரம்குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க ஒத்துழைக்காமல் எதிர்க்கட்சி தலைவர் நாடகமாடுகிறார்.
அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லாதது போல எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கேட்கும் எடப்பாடி பழனிசாமி, நான் தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கியது எதற்காக?
திடீரென சிபிஐ மீது இபிஎஸ்க்கு எப்படி நம்பிக்கை வந்தது? சிபிசிஐடி மீது ஏன் அவர் சந்தேகப்படுகிறார்? காவல்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே தமிழ்நாடு காவல்துறையை களங்கப் படுத்துகிறார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் திசை திருப்பிப் பிரச்சனை செய்ய வேண்டும் என்பதாலேயே எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கேட்கிறார்.
1971 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுக்கடைகள் வந்தது என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். அக்காலகட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகளாவில் நடந்தது. தமிழ்நாட்டை சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெற்று வந்ததால் கள்ளச்சார்யா மரங்களைத் தடுப்பதற்காக மது விற்பனை அனுமதிக்கப்பட்டது. ஆகவே வரலாறு தெரிந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேச வேண்டும்” என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.


