பிரபல ரவுடி புதிய பொறுப்புடன் பாஜகாவில் ஐக்கியம்!
காஞ்சிபுரம்: நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து பிரபல ரவுடி படைப்பைக் குணா பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்குக் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரவுடி படைப்பைக் குணா மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என்று 48 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இதில் 8 கொலை வழக்குகளும் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். வெள்ளை துறை தலைமையில் காவல்துறையினர் தம்மை தீவிரமாகத் தேடுவதை அறிந்து, படைப்பைக் குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின் ஜாமீனில் வெளி வந்தார்.
அவரது மனைவி எல்லம்மாள் பாஜகவில் இணைந்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராகப் பதவி வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக எல்லம்மாள் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் விரைவில் படைப்பைக் குணாவும் பாஜகவில் இணைவாரெனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், காஞ்சிபுர மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ்.பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், படைப்பைக் குணா என்கிற குணசேகரன் காஞ்சிபுர மாவட்ட ஓபிசி அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜகவில் இணைந்தார்.
அவருக்குப் பாஜக மாநில பட்டியல் அணி மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பிரபல ரவுடிகளைப் பாஜக தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்வது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

