
திருப்பதி : திருப்பதியில் பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரி போராட்டம் நடைபெற்றது. திருப்பதி பாலாஜி காலனியில் அகில இந்திய மாணவர்கள் சார்ந்த கூட்டமைப்பின் சார்பில், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை கண்டித்து மாநில துணைத் தலைவர் சலபதி தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது, அவர் பேசுகையில், ‘மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இதனை மாநில அரசு தடுக்க தவறியுள்ளது. நேற்று முன்தினம் புத்தூரில் மூன்று வயது குழந்தைக்குப் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அதனை அறிந்த மக்கள் பயத்தில் உள்ளார்கள். மாநிலத்தில் மது, கஞ்சா, போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடந்து வருவதால், போதையில் இருக்கும் இளைஞர்களால் இளம் குழந்தைகள் பலியாகி வருகின்றனர். மாநில துணை முதல்வரும் உள்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’ எனப் போராட்டத்தில் பேசினார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் உதய்குமார், ஹரிகிருஷ்ணா, சந்திர நாயக், சுரேஷ், மகளிர் சங்க தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டனர்.


