
வைத்தீஸ்வரன் கோயில் தெருவில் அண்ணன் கடையிலே கொள்ளையடித்த தம்பி!
வைத்தீஸ்வரன் கோயில் தெருவில் அண்ணனின் கடையை உடைத்து கொள்ளை கும்பல் உதவியுடன் தம்பியே கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் ரத்னா எலக்ட்ரிகல்ஸ் மற்றும் செல்போன் விற்பனையகம் நடத்தி வருகிறார். இவரது தம்பி ஜான்சன் அதே பகுதியில் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ராஜசேகரன் கடையை மூடி சென்ற நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்துள்ளார். அப்பொழுது அவரது கடையின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சொந்த தம்பியான ஜான்சன் கொள்ளை கும்பல் ஒன்றின் உதவியோடு கடையை உடைத்து உள்ளே நுழைந்ததுடன் கடையில் இருந்த 2.5 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்க பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜசேகரன் சி.சி.டி.வி காட்சிகளுடன் வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராஜசேகரனின் புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் இருந்து அருகே நூறு மீட்டர் தூரத்திலே சொத்து தகராறு காரணமாக அண்ணனின் கடையை தம்பி கொள்ளை கும்பல் உதவியுடன் கட்டிங் இயந்திரம் கொண்டு உடைத்து திருடிய சம்பவம் வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

