
விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை நடைபெற்று வரும் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனநாயக வாலிப சங்கத்தினர்வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி சுமார் எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்கனவே உள்ள பழைய சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. மேலும் ஒரு சில இடங்களில் சாலை விரிவாக்கப் பணி முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகுவதும் இதனால் உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதும் தொடர் கதையாகி வரும் நிலையில்பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்திப் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் பாரதி
தலைமையில் 50க்கும் மேற்பட்ட இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசே பொது மக்களை உயிர் பலி வாங்கும் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை முழுவதுமாக உடனடியாக முடித்திடுஎன கண்டன கோஷங்கள் எழுப்பினர்
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
சாலை மறியலின்போது அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் தீடிரெனக் குவிக்கப்பட்டதால் வடலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

