
தொண்டர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக ராஜாஜி அரங்கில் விஜயகாந்த் உடலை வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கைவிடுத்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் விஜயகாந்த் உடலுக்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அண்ணாமலை; தென்னிந்திய சினிமாவில் விஜயகாந்த் ஒரு முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்தவர்.
அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர் விஜயகாந்த். ஏழைகளின் குரலாக இருந்தவர் இன்று நம்மோடு இல்லை. அனைத்து துறையிலும் முத்திரை பதித்து விட்டு நம்மை விட்டுச் சென்றுவிட்டார். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. தொண்டர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக ராஜாஜி அரங்கில் விஜயகாந்த் உடலை வைக்க வேண்டும். விஜயகாந்துக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

