
தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையில், வடமேற்கு திசையில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, வடமேற்கில் நகர்ந்து இன்று வட தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தென்கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் ஆகியப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும், சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 60 கிலோ மீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


