RBI:7,581 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன!

2000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், ஆனால், 7,581 கோடி ரூபாய் இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மே 19, 2023 அன்று, ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அன்றைய தினம் வணிகம் முடிவடையும்போது புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது. ஜூன் 28, 2024 அன்று வணிகம் முடிவடையும்போது ரூ.7,581 கோடியாக இருந்தது.

“அதாவது மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் திரும்பி வந்துவிட்டன” என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7, 2023 வரை நாட்டில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும், 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான வசதி இருந்தது. இப்போது, ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி உள்ளது.

அக்டோபர் 9, 2023 முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் வசதி உள்ளது. தபால் அலுவலகம் மூலமாகவும் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி, அதற்கு நிகரான தொகையைத் தங்கள் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம்.

அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.

2016 நவம்பரில், அப்போது நடைமுறையில் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2022ஆம் ஆண்டில் அவற்றைப் புழக்கத்திலிருந்து திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *