
மலை கிராமத்தில் ரூ.4 இலட்சம் மதிப்பில் சொந்த செலவில் ரேஷன் கடை கட்டித்தந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி. உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி மலை கிராமத்தில் ரூ.4 இலட்சம் மதிப்பில் சொந்த செலவில் ரேஷன் கடை கட்டித்தந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணனுக்கு மலைவாழ் மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வன சரகங்கள் உள்ளன. இங்குக் குழிப்பட்டி, குருமலை, கோடந்தூர், தளிஞ்சி உள்ளிட்ட 18 மலை கிராமங்களில் சுமார் 6,000 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ரேஷன் கடையை மலை கிராமத்தில் அமைத்துத் தர அரசு மற்றும் தனி நபர் எனப் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மலை கிராம மக்களின் நிலையைக் கண்ட (திமுக) மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் சொந்த நிதியிலிருந்து ரூ. 4 இலட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையை மலை கிராமத்திலேயே கட்டிக் கொடுத்துள்ளார்.
இதனால் தற்போது ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு மலை கிராமத்திலேயே அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்களது நீண்ட கால பிரச்சனைக்குத் தீர்வு கண்ட (திமுக) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் அவர்களுக்குத் தங்களது பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து மலை கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.


