
ரேஷன் பொருட்கள் மக்களைச் சென்றடைவதை அரசு உறுதிசெய்ய வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
“தமிழ்நாடு முழுவதும் மூன்று மாதமாகத் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
சென்ற மாதமே இதுகுறித்து நான் சுட்டிக்காட்டி இருந்த நிலையில், இதுவரை ரேஷன் பொருட்கள் விநியோகத்தை சீர்செய்யத் தவறிய நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ரேஷன் பொருட்களை முறையாகக் கொள்முதல் செய்து விநியோகிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது.
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, மக்கள்மீது துளியும் அக்கறையற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான ரேஷன் பொருட்களின் விநியோகத்தில் கவனம் செலுத்தி, அனைத்து ரேஷன் பொருட்களும் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்யத் தி.மு.க. முதல்வரை வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

