
குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது எனப் பாமக நிறுவனர் இராமதாஸ் விமர்சித்துள்ளார்.
பாமக நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “’குடி அரசு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியா என்ற ‘குடி’அரசு நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று போராடியதன் பயனாக, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவுக்கு விடுதலை அளித்த ஆங்கிலேயர்கள், நம்மை மகிழ்ச்சியாக இருக்கும்படி கூறிவிட்டு வெளியேறினார்கள். விடுதலை மட்டும் போதாது, மக்களை மக்களே ஆளும் நிலை வர வேண்டும் என்ற நோக்குடன் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்தியாவை ‘குடி’அரசு நாடாக நமது தலைவர்கள் அறிவித்தார்கள்.
குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது. குடியரசு என்றால் மக்களைக் குடிக்கத்தூண்டும் அரசு. குடியரசு என்றால் குழந்தைகள்வரை குடிக்கப் பழக்கும் அரசு. குடியரசு என்றால் சந்துபொந்துவிடாமல் எல்லா இடங்களிலும் மதுக்கடைகளை திறந்து மக்களைக் குடிக்கச்சொல்லும் அரசு என்பது இப்போதுதான் புரிகிறது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேரைக் கொல்லும் டாஸ்மாக் சாராயம் மட்டுமின்றி, அவ்வப்போது கொத்துகொத்தாக மக்களைக் கொல்லும் கள்ளச்சாராயமும் தலைவிரித்தாடுகிறது. கேட்டால் அதில்தான் கிக் இருப்பதாகக் கூறுகிறார் ஒரு மூத்த அமைச்சர். என்னவோ, மதுவுக்கு அடிமையான மக்கள் நிறைந்த தமிழ்நாட்டில் பணி செய்வது எமனுக்குதான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.




