Advertisements

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக சார்பாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்.? கூட்டணி கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா.? என்பதை தற்போது பார்க்கலாம்.
மார்ச் 16 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. இதற்கு முன்னதாக தமிழகம் மற்றொரு தேர்தலையும் எதிர்நோக்கியுள்ளது. அந்த வகையில் மார்ச் 16ஆம் தேதி ராஜ்யசபா தேர்தலானது நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் இருந்து திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்டனர். இதே போல அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்
பதவி காலம் முடிவடைந்த தமிழக எம்பிக்கள்
இவர்களது பதவி காலம் அடுத்த மாதம் முடிவடையவுள்ள நிலையில், இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக மார்ச் 5ஆம் தேதியும், வேட்புமனு பரிசீலனை மார்ச் 6ஆம் தேதியும், வாக்கு பதிவு மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
திமுகவில் யாருக்கு வாய்ப்பு.?
அந்த வகையில் யார் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் திமுக சார்பாக திருச்சி சிவா மற்றும் என்.ஆர்.இளங்கோவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது திமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படவுள்ளது. எனவே அந்த இடத்தில் தேமுதிக சார்பாக சுதீஷ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு இடத்தில் காங்கிரஸ் அல்லது விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் யாருக்கு வாய்ப்பு.?
அதிமுக சார்பாக 2 பேரை தேர்ந்தெடுக்கப்படலாம். தற்போது எம்பியாக இருக்கும் தம்பித்துரைக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும், மற்றொரு இடத்தை பாமக தலைவர் அன்புமணிக்கு வழங்கப்படலாம் எனவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை அதிமுக வட்டாரம் மறுத்து வருகிறது. மற்றொரு இடத்திற்கும் அதிமுக சார்பாக மூத்த தலைவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால் இன்றோ அல்லது நாளையோ வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு திமுக மற்றும் அதிமுக தலைமை வெளியிடும் என தகவல் கூறப்படுகிறது.
Advertisements


