Advertisements

சட்டமன்ற தேர்தலில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் 60 பேரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர திமுக தலைமை தயக்கம் காட்டி வருகிறது.
தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இநத நிலையில் திமுக இந்த தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
சர்வே எடுத்த திமுக:
அதன்படி, திமுக தனது அமைச்சர்கள் உள்பட எம்எல்ஏ-க்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. அதிமுக, நாம் தமிழர், தவெக என வரும் தேர்தலில் போட்டி மிகவும் சவாலானதாக மாறியிருப்பதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமான நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
சட்டமன்றத்தில் செயல்பாடுகள் எப்படி? சட்டமன்றத்திற்கான வருகைப்பதிவு எப்படி? தொகுதியின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவு எப்படி? தொகுதியின் வளர்ச்சி எப்படி? தொகுதியில் மக்கள் மத்தியில் செல்வாக்கு எப்படி? குற்ற வழக்குகள், சொத்து மதிப்பு உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் திமுக தலைமை இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
60 பேருக்கு நோ?
இந்த ஆய்வின் அடிப்படையில் தற்போதைய திமுக எம்.எல்.ஏ.க்கள் சுமார் 60 பேரின் வெற்றி வாய்ப்பு 50 சதவீதத்திற்கும் கீழே இருப்பதாகவே தெரியவந்துள்ளது. இதனால், இவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கலாமா? அல்லது புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமா? என்று கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.
அதேபோல, அந்த தொகுதியில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் யார்? அவர்களின் செயல்பாடுகள், செல்வாக்கு குறித்தும் திமுக ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதனால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளவர்களுக்கே வாய்ப்பு வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இந்த 60 பேரில் பலரும் கடந்த 10 ஆண்டுகளாக திமுக உறுப்பினராக இருப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது.
தனிப்பெரும்பான்மை:
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து கூட்டணி கட்சிகளின் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக திட்டமிட்டு வருகிறது. இதனால், வேட்பாளர் தேர்வில் அலட்சியம் காட்ட திமுக விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால், கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர்களாக இருந்த பலருக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலில் மூத்த அமைச்சர்கள் சிலரது பெயரும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வரும் தேர்தலில் திமுக-வின் வேட்பாளர் பட்டியல் எப்படி இருக்கும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பே உருவாகியுள்ளது.
இளைஞரணிக்கு வாய்ப்பு?
ஏற்கனவே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியைச் சேர்ந்த தனது ஆதரவாளர்கள் 40 பேருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒருவேளை பட்டியலில் உள்ள 60 பேர்களில் பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டால் உதயநிதி ஸ்டாலின் அளித்த இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Advertisements




