
நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை நடிகர் சத்யராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘கூலி’ படம் உருவாகி வருகிறது. ‘மிஸ்டர் பாரத்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 45 வருடங்கள் கழித்து சத்யராஜ் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருக்கிறார். சமீபத்திய பேட்டியில் ‘கூலி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் சத்யராஜ். அதில், “’கூலி’ படப்பிடிப்பில் பல வருடங்கள் கழித்து நானும் ரஜினி சாரும் சந்தித்துக் கொண்டு நிறைய விஷயங்கள் ஜாலியாகப் பேசினோம்.
இருவரும் என்ன வொர்க்கவுட் செய்து கொள்கிறோம் எனவும் கேட்டுக் கொண்டோம். ரஜினி என்னிடம் எனக்கு என்ன வயதாகிறது எனக் கேட்டார். 70 என்று சொன்னதும் ஆச்சரியமாகி விட்டார். ’மூன்று முகம்’ படம்தான் ரஜினியுடன் எனக்கு முதல் படம். அதன் பிறகு, ‘சிகப்பு மனிதன்’, ‘நான் மகான் அல்ல’, ‘ராகவேந்திரா’, தம்பிக்கு எந்த ஊரு’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ’மிஸ்டர் பாரத்’ எனச் சில படங்கள் நடித்திருக்கிறேன். ‘கூலி’ நிச்சயம் எங்களது ரசிகர்களுக்குப் பிடித்த படமாக இருக்கும்”.


